தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர்.
அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கடந்தை குழவி கூடானது இருந்த நிலையில், அந்த கூடானது திடீரென கலைந்து அதிலிருந்து கடந்தை குழவிகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, வலி தாங்க முடியாமல் குழவியிடம் கடிபட்டவர்கள் துடிக்கவே அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லெட்சுமணன் மற்றும் மகராசி ஆகிய 2 நபர்கள் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மாமியார் மருமகள் உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தற்போது உயிரிழந்த லெட்சுமணன் மற்றும் மகராசி இருவரும் கணவன், மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த தென்னை மரத்தில் இருந்த கடந்தைகுழவி கூட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Leave a Reply