கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடையநல்லூர் பகுதி தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் தொல்லைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தன்னார்வ அமைப்புகள் இணைந்து கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் தெரிவித்து உள்ளார்கள்.
ஆனால், நகராட்சிக்கு சொந்தமான நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் இல்லை. விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளில், உள்ளாட்சி அமைப்புகள் தங்களது சொந்த கால்நடை மருத்துவர் அல்லது விலங்குகள் வாரியத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல அமைப்பு (என்ஜிஓ) மூலம் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் எந்த ஒரு தன்னார்வ அமைப்புக்கும் கருத்தடை செய்திட விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. கால்நடை மருத்துவர் பணியிடமும் கடையநல்லூர் நகராட்சியில் இல்லை. இதனால், கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களைக் கொண்டே ஆண்டு முழுவதும் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
Leave a Reply