சொக்கம்பட்டி அருகே விளைநிலத்தை சேதப்படுத்தி வரும் காட்டு – யானைகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை அழைத்து காவல்துறை, வனத்துறை, கலந்தாய்வு கூட்டம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள சொக்கம்பட்டி சபரிமலை ஓடை பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பளவில் விவசாயிகளுக்கு நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலத்தில் தென்னை, வாழை,மா, தேக்கு உள்ளிட்ட மரங்களை விவசாயம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினம்தோறும் தொடர்ச்சியாக காட்டு யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி விளைநிலத்திற்குள் புகுந்து தென்னை, தேக்கு, வாழை, பனை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வந்த நிலையில் காட்டுயானைகளை வனத்துறையினர் வன பகுதியில் விரட்டியும் , இதை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை சொக்கம்பட்டியில் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர் உடனடியாக காவல்துறையும், வனத்துறையும் விவசாயிகளை அழைத்து யானைகளை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் புளியங்குடி போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசாரும் , கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் சார்பில் வலங்கையா பாண்டியன், குட்டி ராஜா, சந்தன பாண்டியன், அதிமுக தகவல் தொழில்நுட்ப மண்டலச் செயலாளர் சிவா ஆனந்த் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சார்பில் வனப்பகுதியில் அகழி அமைத்து வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகாமல் தடுக்க உரி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகப்படியான வன அலுவலர்களை நியமித்து வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் வரட்டாறு பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும், தினமும் ட்ரோன் கேமரா பயன்படுத்தி யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியில் வராமல் தடுக்க வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு உடனுக்குடன் தற்போதைய மதிப்பு நிலவரப்படி இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு காட்டுக்குள்ளே தகுந்த தீவனம், தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து அதன் மூலம் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதனை வனத்துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் தவறும் பட்சத்தில் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுமொத்த விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்
Leave a Reply