தென்காசி மாவட்டம், தென்காசி ரயில் நிலையம் அருகே கடந்த 15-ஆம் தேதி ஒரு நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தென்காசி போலீசார் கிடைத்த தகவலின் அடிப்படையில், தென்காசி போலீசார் விரைந்து சென்று படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், படுகாயங்களுடன் ரயில் நிலையம் அருகே கிடந்த நபர் சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்த முருகன் (வயது 43) என்பது தெரியவரவே, அவரை தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், படுகாயம் அடைந்த முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசார் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இரவு சுமார் 11 மணிக்கு மணிக்கு மேல் சில இளைஞர்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளை பதிவாகியிருந்த நிலையில், அந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது, உயிர் இழந்த முருகனை கல்லால் தாக்கி அந்த சிறுவர்கள் தான் கொலை செய்தது தெரியவந்த நிலையில், முருகனை கொலை செய்தது ஏன் என போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த சிறுவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மது அருந்திவிட்டு கேக் வெட்டி கொண்டாடியதாகவும், அப்போது கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் முருகன் கழிப்பிடம் சென்று கொண்டிருந்த நிலையில், இவர்கள் அடித்த டார்ச் லைட்டானது முருகனின் மர்ம உறுப்பில் பட்டதால் ஆத்திரமடைந்த முருகன் அந்த சிறுவர்களை ஆபாச வார்த்தை கூறி திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த கற்களை வைத்து முருகனின் தலையில் தாக்கியதில் முருகன் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 சிறுவர்களை தற்போது போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
.
Leave a Reply