தேவையானவை : பாஸ்மதி அரிசி – 300 கிராம், பெ. வெங்காயம் – 2, நறுக்கிய பலாக்காய் – 2 கப், பச்சை மிளகாய் – 3-4, தக்காளி – 1, பிரியாணி மசாலா – ஒன்றரை டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 3 tbs, புதினா இலைகள் – 2 tbs, தயிர் – 50மிலி, எண்ணெய், உப்பு – தேவைக்கு.
அரைக்க : கிராம்பு – 2, பட்டை – 1 இஞ்ச், தோல் சீவிய இஞ்சி – 1 இஞ்ச், பூண்டு – 8 பற்கள்,
தாளிக்க : சீரகம் – 2 டீஸ்பூன், பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 2, நெய்/எண்ணெய் – 5 tbs
அரிசியை 30 நிமிடங்கள் ஊறவிடவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். நீள நீளமாக வெங்காயத்தை நறுக்கவும். அரைக்கும் பொருட்களை சிறிது நீர் விட்டு மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து வைக்கவும்.
செய்முறை : பலாக்காயை பிஞ்சாக தேர்ந்தெடுத்து அதனுடைய தோலை நீக்கி காய்ப்பகுதியை நீளமாக நறுக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் ஒற்றி அதிகப்படியான எண்ணெயை நீக்கி தனியாக வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய்/நெய் ஊற்றி அது சூடானதும் தாளிக்கும் பொருட்களை தாளித்து பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவை சேர்த்து..
பச்சை வாசனை போக கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும். இதோடு உப்பு, தக்காளி, பச்சை மிளகாய் பிரியாணி மசாலா, மஞ்சள்தூள், சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். பிறகு புதினா & மல்லித் தழை, தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் பொரித்து வைத்த பலாக்காயைச் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு ஒன்றே முக்கால் கப் நீர் ஊற்றி தேவையான உப்பு போட்டு வேகவிடவும் இத்துடன் ஊறிய அரிசியை நீரை வடித்து சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வந்த பிறகு குக்கரை மூடி, தீயை குறைவாக வைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப்பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவிடவும். 15 நிமிடங்களுக்குப் பின் வறுத்த முந்திரி மல்லித் தழைகள் தூவி பரிமாறவும்.
ருசியான பலாக்காய் பிரியாணி ரெடி! தால்ஸா குருமா தயிர் பச்சடி அனைத்தும் இதற்கு நல்ல காம்போ ஆகும்! இது மட்டன் பிரியாணியைப் போன்றே இருக்கும் 100% சைவ பிரியாணி!
Leave a Reply