தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பைப் பதிவு செய்ய சென்ற காவலர் மாரிராஜா என்பவரை ரவுடி லெனின் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் இருப்பைக் காவல்துறையினர் பதிவு செய்வது வழக்கமான நடைமுறையாக இருந்துவரும் நிலையில், தைப்பொங்கல் திருவிழா வரவதை ஒட்டி, சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் இருப்பைப் பதிவு செய்யும் பணியில் பணவடலிசத்திரம் காவல் நிலையக் காவலர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கருத்தானூர் கிராமத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் இருப்பை அறிவதற்காக அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவந்த போது எதிர்பாராதவிதமாக அரிவாளை எடுத்துவந்த லெனின் காவலர் மாரிராஜாவின் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டுத் தப்பி ஓடினார்.
இதனைத் தொடர்ந்து வெட்டுக்காயங்களுடன் இருந்த காவலர் மாரிராஜாவை மீட்ட காவல்துறையினர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் ரவுடி லெனினை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply