தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆரியநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை என்பது குறைவாக இருக்கின்ற நிலையில் இப்பள்ளியில் 148 மாணவர், மாணவிகள் பயின்று வருவது வரவேற்கத்தக்கது.

ஆனால் இங்கு பயிலும் மாணவர், மாணவிகள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் தினமும் பள்ளிக்குச் சென்று திரும்புவது உயிரைப் பயணம் செய்து சென்று வருவது போல் உள்ளது. ஆம், இப்பளர்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இக்கட்டிடத்தின் ஒருபகுதி நேற்று முன் தினம் இரவு செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் நேற்று இடிந்து விழுந்துள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை கேரள மாடலில் ஓடுகளால் வேயப்பட்டது ஆகும்.

இந்த மேற்கூரை மழையால் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இக்கட்டிடம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர், மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதால் தற்போது பெய்த மழையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

நல்வாய்ப்பாக யாரும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா என பார்ப்போம்…
Leave a Reply