Advertisement

தென்காசி – குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்

தென்காசி அரசு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் பொது சுகாதாரம் -நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று (மார்ச் 17) தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 1509 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 1,660 பேர் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 22 வரை (புதன்கிழமை நீங்கலாக) ஐந்து நாள்கள் இம்முகாம் நடைபெறும். இம்மாவட்டத்தில் ஒரு லட்சத்து 49,949 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் ஏ திரவம் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு மாலைக்கண் நோய் வராமலும் பாதுகாக்கப்படுவர். எனவே பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று பயன்பெற வேண்டும் என்றார்.

Share This News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *