டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை மனு அளித்தார்.
தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமான தென்காசிக்கு மேம்பட்ட ரெயில் சேவைகள் வழங்குவதற்கான அவசர தேவையை தாங்கள் கருணையுடன் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பண்டையகால பாண்டிய அரசின் தலைநகராக விளங்கிய தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள், சங்க இலக்கியப் பாரம்பரியமும், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் போன்ற இந்து புனிதத் தலங்களும் உள்ள பகுதிகளாக உள்ளன. தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், செங்கோட்டை போன்ற பகுதிகள் தொழில், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆன்மிகத்தில் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு நேரடி ரெயில் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், கீழ்காணும் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
- தென்காசி – பெங்களூரு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த புதிய ரெயில் ராஜபாளையம், சிவகாசி, தென்காசி போன்ற நகரவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில்துறை வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் முழுமையான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- வண்டி எண் : 06029/30 – திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாரமிருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலை (தென்காசி, மதுரை வழியாக) தொடர்வண்டியை நிரந்தரமாக “சிறுவானி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் இயக்க வேண்டும். இந்த ரயில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. ஒரு பயணத்திற்கும் சுமார் ₹.8 இலட்சம் வருமானத்தை ஈட்டும் அளவில் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் திருநெல்வேலியில் காத்திருக்கும் வண்டி எண்: 22605/06 புரூலியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் லைஓவர் ரேக் (lie-over rake) பயன்படுத்துவதன் மூலம் நிரந்தர சேவையாக மாற்ற இயலும்.
- வண்டி எண்: 06003/04 – திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை (தென்காசி, மதுரை வழியாக) “தாமிரபரணி எக்ஸ்பிரஸ்” என பெயரிட்டு நிரந்தரமாக இயக்க வேண்டும். இந்த ரயில் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. ஒரு பயணத்திற்கும் சுமார் ₹10 இலட்சம் வருமானம் ஏற்படுத்தும் அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருநெல்வேலியில் காத்திருக்கும் வண்டி எண்: 22629/30 தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலின் லைஓவர் ரேக் (lie-over rake) மூலம் இந்த சேவையை நிரந்தரமாக்க முடியும்.
- எண்டி எண்: 11021/11022 மும்பை – திருநெல்வேலி சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிப்பு வழித்தடத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி ஆகிய முக்கிய நகரங்கள் சேர்க்கப்பட வேண்டும். பயணிகள் நலனுக்காக மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரயிலில் எல்எச்பி வகை பெட்டிகளை (மாடர்ன் கோச்கள்) பயன்படுத்தும் வகையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. இச்சேவை நீட்டிப்பின் மூலம், தென்காசிக்கு மும்பை நகரத்துடன் முதல் முறையாக நேரடி ரெயில் சேவை கிடைக்கும், இது தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் பயனளிக்கும்.
- வண்டி எண்: 12651/12652 தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (மதுரை – டெல்லி) ரெயிலை தென்காசி வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த நீட்டிக்கப்பட்ட வழித்தடம் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களை கடக்க வேண்டும். இவ்வாறு நீட்டிக்கப்பட்டால், தென்காசிக்கு தேசியத் தலைநகரான டெல்லியுடன் முதல் முறையாக நேரடி ரெயில் சேவை கிடைக்கும். இது மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நிபுணர்கள் ஆகியோருக்கு பயனளிக்கக்கூடிய, சென்னையைத் தாண்டிய நல்ல அணுகலையும் வசதியையும் உருவாக்கும்.
தென்காசியில் ஜோஹோ கார்ப்பரேஷன் போன்ற உலகத் தர மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவில் செயல்பட்டு வருகின்றன. இது ஆயிரக்கணக்கான உயர் திறன் வாய்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ராஜபாளையம் – அறுவை சிகிச்சைக்கான துணி (சர்ஜிகல் காட்டன்) உற்பத்தியில் உலகின் முன்னணி மையமாக திகழ்கிறது. சிவகாசி – பட்டாசு, அச்சுத் தொழில் மற்றும் தீக்குச்சிகள் உற்பத்தியில் உலகப் புகழ் பெற்ற நகரம். விருதுநகர் – டெக்ஸ்டைல் பார்க், தொழில்துறை விரிவாக்கத்திற்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் “தென்னிந்தியாவின் ஸ்பா நகரம்” என அழைக்கப்படும் குற்றாலம், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இருப்பினும், இந்த பகுதியில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன. தென்காசி நகரம், கேரள மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக விளங்குவதுடன், கோடிக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள முக்கிய நகராகும். எனவே தென்காசிக்கு மேற்கண்ட ரெயில் சேவைகள் அத்தியாவசியம் ஆகிறது.
புதிய ரெயில் சேவைகள் நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து வசதிகளை மட்டுமல்லாது, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும், தொழில்துறை விரிவடைவதற்கும் உதவும். மேலும் இப்பகுதியில் உருவெடுத்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி சூழலை ஆதரிக்கும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும், மற்றும் தென் தமிழகத்தின் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்கு நேரடி பங்களிப்பு அளிக்கும். எனவே தாங்கள் எமது கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆனந்தன் அய்யாசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
*மனுவைப் பெற்றுக் கொண்ட மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிச்சயமாக கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று ஆனந்தன் அய்யாசாமியிடம் உறுதி அளித்தார்.
Leave a Reply